யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம அலுவலர், அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாள் மற்றும் கம்பிகளுடன் 4 உந்துருளிகளில் அவரது அலுவலகத்துக்குள் பிரவேசித்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்று அவரை அச்சுறுத்தியதுடன், அவரது முச்சரக்கரவண்டி, மடிகணினி, கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
இன்று நண்பகல் 12.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர் ஜேசுதாசன் எனப்படும் கிராம அலுவலர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொக்குவில் பகுதியிலும், எட்டு பேர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது இன்று பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து ஒன்றுக்கும் அவர்களால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவின் தற்போதைய தலைவராக கூறப்படும் அசோக்குமார் என்ற அசோகனின் வீட்டின் மீதும், மேலும் 3 பேரின் வீடுகள் மீதும் நேற்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
8 பேர் கொண்ட ஒரே கும்பலால் கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுளளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த உந்துருளி ஒன்று காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் இன்று மாலை இந்த உந்துருளி மீட்கப்பட்டதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த சிற்றூர்திக்கு வாகனத்துக்கு தீவைத்துடன், அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியபின் தப்பித்துச் சென்ற நிலையில், இந்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் உந்துருளியாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.