யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேசபை ஆகியவற்றில் சிறப்பான ஆட்சி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபடவுள்ளார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபை உறுப்பினருமான வீ.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் காணப்பட்ட தடுப்பணை கடலால் அரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக தடுப்பணை அமைக்கும் நடவடிக்கையில் மணிவண்ணன் தலைமையிலான அவருடைய ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு சென்றிருந்த மணிவண்ணன் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உட்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேசி காத்திரமான ஆட்சி ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்து பேசி நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபடப் போகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.