யேர்மனி நாட்டின் ஆளும் கட்சியான கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்க்கெல் 18 ஆண்டு கால கட்சித் தலைமைத்துவப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை தமது பதவி விலகல் தொடர்பில் உணர்ச்சி பூவமாக கருத்துத் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமது கட்சியின் தாராளவாதக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரின் பதவி விலகலை அடுத்து, அந்த கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய தலைவராக அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer) தேர்வாகியுள்ளார்.
அடுத்த தேர்தலில் கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் சார்பில் நாட்டின் ஆட்சித் தலைமைத்துவப் பதவிக்கு அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யேர்மனி நாட்டின் ஆட்சித் தலைவரான ஏஞ்சலா மெர்க்கெல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளபோதிலும் அவரது ஆட்சிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை அவர் தொடர்ந்தும் யேர்மனியின் ஆட்சித் தலைமைத்துவப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.