ரொரன்ரோவில் இந்த பருவகாலத்திற்கான முதலாவது பனிப்பொழிவு நேற்று ஆரம்பமான நிலையில், இன்று அதிகாலை 5 மணி வரையிலான 12 மணிநேர இளைவெளியில் மாத்திரம் 63 வீதி விபத்துகள் பதிவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5 மணியில் இருந்து இன்று அதிகாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில், சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதான 45 விபத்து முறைப்பாடுகளும், மனிதர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதான 18 விபத்துகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவற்றுள்ள பெரும்பாலான விபத்துகள் ரொரன்ரோவின் வட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், டவுன்ரவுன் பகுதியினை விடவும் அந்த பகுதிகளிலேயே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்துகளுக்கு பனியுடன் கூடிய வானிலையும் ஒரு காரணமாக இருந்த போதிலும், சாரதிகளின் தவறுகளே பிரதானமான காரணங்களாக காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளில் சில வில்சன் அவனியூவுக்கு வடக்கே, யங் வீதியின் மலைப் பாங்கான பகுதிகளில் நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளதாகவும், தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்கள், பனி படர்ந்த வீதியில் நிறுத்த முடியாது ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான விபத்துகளை அடுத்து, குறித்த அந்த வீதி ஊடான இருவழிப் பயணங்களும் காவல்துறையினரால் தடை செய்யப்பட்ட போதிலும், அதிகாலை அளவில் வடக்கு நோக்கிய வழித்தடத்தின் ஊடான போக்குவரத்துகள் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.