எதிர்வரும் ரொரன்ரோ நகரசபைத் தேர்தலின்போது நகர பிதா பதவிக்காக போட்டியிடப்போவதில்லை என்று, முன்னாள் ரொரன்ரோ நகரபிதா மெல் லாஸட்மனின் மகன் பிளெய்ன் லாஸட்மன்(Blayne Lastman) தெரிவித்துள்ளார்.
பிளெய்ன் லாஸட்மன் ரொரன்ரோ நகரபிதா பதவிக்காக போட்டியிடப் போகின்றார் என்றும், இன்று வியாழக்கிழமை அவர் ரொரன்ரொ நகரமன்றில் வேட்பு மனுவினை பதிந்து கொள்ளப் போகின்றார் எனவும் நேற்று பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று காலையில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள பிளெய்ன் லாஸட்மனின் பரப்புரைத் தொடர்பாடல் இயக்குநர் றொப் கோட்ஃபிறே(Rob Godfrey), தான் நகரபிதா பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்பதனை பிளெய்ன் லாஸட்மன் இன்று அதிகாலை மூன்று மணியளவில் தனது குழுவினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் முன்னாள் நகரபிதா மெல் லாஸட்மனின் குடும்பத்தாருக்கும் தற்போதய நகரபிதா ஜோன் ரொறியின் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள குடும்ப உறவுக்கும், இந்த முடிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் விபரித்துள்ளார்.
அதனால் பிளெய்ன் லாஸட்மன் தேர்தல் வேட்பாளராக பதிவு செய்வது குறித்து இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊடக சந்திப்பும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.