TTC எனப்படும் ரொரன்ரோ போக்குவரத்துக் கழகத்தின் வாகன தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ரொரன்ரோவில் அமைந்துள்ள அதன் 24 வாகன நிறுத்துமிடங்களில் 14ற்கான கட்டண அதிகரிப்பினை அடுத்த மாத ஆரம்பித்தில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை TTC நிர்வாகச் சபை வழங்கியுள்ளது.
இந்த புதிய கட்டணத்தின்படி, வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தனை விடவும் 2017ஆம் ஆண்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு டொலர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை இந்த கட்டண அதிகரிப்பு மூலம் TTC 1.5 மில்லியன் டொலர்கள் வருமான அதிகரிப்பினை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் தற்போது காணப்படும் பற்றாக்குறையின் ஒரு பகுதி சீர் செய்யப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் சில பொதுமக்கள் TTC வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கக்கூடும் என்ற போதிலும், ஏனைய வாகன நிறுத்துமிடங்களில் அறவிடப்படும் கட்டணங்களையும் கருத்தில் கொண்டே தாம் இந்த அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக TTC தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள TTCயின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர், அனைத்து வழிகளிலும் தற்போது விலை அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலையிலேயே தாம் இந்த முடிவினை மேறகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது பல வாகனத் தரிப்பிடங்களுக்கான கட்டணங்கள் கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கப்படவிலலை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.