வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே என்.சிறிகாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், பௌத்த விகாரை ஒன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன என்ற கண்டுபிடிப்பு ஒன்றின் பேரில் அங்கிருந்த இந்து ஆலயத்தின் ஐயனார் சூலத்தை அகற்றி விட்டு,கௌதம புத்தரின் சிலை ஒன்றை தொல்லியல் திணைக்களம் நிறுவியுள்ளது.
தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வரும் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது.
இராஜாங்க அமைச்சர் ஒருவர், கொழும்பிலிருந்து வந்து பாதுகாப்பு முஸ்தீபுகளுக்கு மத்தியில் பௌத்த மத அனுட்டானங்களோடுஆரவாரமாக ஆரம்பித்து வைத்துள்ளளார்.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை, அரசாங்கத்தின் அதிகார அடாவடித்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்பதற்கு அப்பால், தமிழ் இனத்தின் மரபு வழித் தாயகமான வட,கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைப்பதன் மூலம் சிதைக்க முனையும் பேரினவாத அரசியற் சதித் திட்டத்தின் சமீபத்திய அதிரடி என்பதும் அப்பட்டமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.