யாழ். வடமராட்சி கிழக்கில் 1400 வெளிமாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாக மருதங்கேணி பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், இவ்வாறான நிலை மிகவும் ஆபத்தானது என்றும், வடமராட்சி கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்களை அல்லது வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு மக்கள் கோரியிருந்த போதிலும், மக்களுடைய கோரிக்கை அரசாங்கத்தினால் புரிந்து கொள்ளப்படவில்லை எனவும், தற்போது குறித்த மீனவர்களை வெளியேற்றுவதற்காக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பிரதேச செயலர் வடமராட்சி கிழக்கில் 1400 தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்து கடற்றொழில் செய்வதாகவும், அவர்கள் அரச காணிகளில் தங்கியிருப்பதாகவும் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தற்காலிகமாக தங்கியிருக்கும் அவர்கள், வெகு விரைவில் நிரந்தரமாக தங்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன எனவும், இதனால் வடமராட்சி கிழக்கில் 10பேருக்கு ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என்னும் அளவுக்கு நிலமை மாறவுள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த சம்பவங்களை நாங்கள் நேரடியாக பார்த்திருக்கிறோம் எனவும், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிது சிறிதாக வந்து தற்காலிகமாக தங்குவதாக காட்டிக் கொண்ட மீனவர்களே, பின்னர் அங்கு நிரந்தரமாக தங்கியிருப்பது மட்டுமல்லாமல், தமக்கு நிரந்தர காணிகளையும், வீட்டு திட்டங்களையும் வழங்குங்கள் என்று இப்போது கேட்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி யாழ்ப்பாணத்திலும் குறிப்பாக வடமராட்சி கிழக்கிலும் தென்பகுதி மீனவர்கள் கேட்கும் நிலை வரவுள்ளது எனவும், இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.