ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் வரும் திங்கட்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அன்று அல்லது அடுத்த நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மான வரைவில் எழுத்துமூல திருத்தங்களை முன்வைப்பதற்கான கால எல்லை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு 40 நாடுகள் வரை இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான விடயத்தில் மேற்குலக நாடுகள், கிழக்கு நாடுகள் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பினால் சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறுகின்றன.
குவாட் அமைப்பினால் பின்பற்றப்படும் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ-பசுபிக் கொள்கையை பின்பற்றுமாறு சிறிலங்காவுக்கு பல்வேறு வழிகளில் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.