வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் டான் மெக்கான், எதிர்வரும் மாதங்களில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்
வரும் இலையுதிர் காலத்தில், உச்சநீதிமன்றத்துக்காக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதும் அவர் குறித்த இந்த பதவியில் இருந்து செல்வார் என்றும் அதிபர் டிரம்ப் கீச்சகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் மெக்கான் வழங்கும் ஒத்துழைப்பு, அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒன்றைத் தொடர்ந்து அவரின் இந்த வெளியேற்றம் நிகழவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி ராபர்ட் முல்லருக்கு, மெக்கான் மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
முல்லரின் இந்த விசாரணை டிரம்பின் அதிபர் பதவிக்கு பிரச்சனையான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவராக மெக்கானும் இருந்தார் என்பதுடன், தற்போது வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பலர் அங்கிருந்து விலகியுள்ள நிலையில், கடைசியாக இவரும் விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.