சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் 887 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவே, சிறிலங்காவில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்.
அதேவேளை, சிறிலங்கா இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், 56 ஆயிரத்து, 76 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, ம9 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடங்களில் நேற்று 679 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பேருக்கும், முல்லைத்தீவில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.