ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், பராமரிப்புப் பணிகளுகாக ஸ்டெர்லைட் ஆலை வரும் 15 நாட்களுக்கு மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், புதியம்புத்தூர், குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வணிகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு இயக்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை தடை செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் தங்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை இன்று (வியாழக்கிழமை) முதல் 15 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்கள் போராடிவரும் நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக ஆலை மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.