வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படையினரும் வலம் வரும் நிலையில், வட பகுதிக்கு எவ்வாறு கடல்வழியாக கஞ்சா எடுத்து வரப்படுகின்றது என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சுயதொழில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய முதலமைச்சர், தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி தற்போது கேரள கஞ்சா வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில், வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வட பகுதியில் தொடர்ந்தும் நிலவும் இறுக்கமான பாதுகாப்பு காவல்களையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனில், எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்கேயோ ஓட்டைகள் காணப்படுகின்றது என்பது புலனாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்து வருகின்றதோ என்ற சந்தேகமும் எழுவதாகவும் குறிப்பிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், போரில் ஈடுபட்ட படையினர் வட மாகாணத்தில் பல ஏக்கர் காணிகளில் தொடர்ந்து இருப்பது மக்களின் சுமூகமான, சுதந்திரமான வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
படிப்படியாக வட மாகாணத்தில் இருந்து படையினர் திருப்பப் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கிலுள்ள வனப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், வட பகுதியில் தமிழர்களுக்குரிய அடையாளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்காளர்களாலும் ஏனையோராலும் மறுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் இராச்சியம் அமைந்துள்ள பகுதியில் 12 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் அமைந்திருந்த சிவன் ஆலயம் உருக்குலைவின்றி மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தமிழ் பேசும் இந்துக்களின் இருப்பிடம் எங்கு வரையெல்லாம் வியாபித்திருந்தது என்பதற்கு சான்றுகளாக விளங்குவதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.