அடுத்த தொகுதி சினோபார்ம் தடுப்பூசி மருந்துகளை விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சீனத் தூதரகத்துக்குச் சென்று, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்னவுடன் இணைந்து, நேற்று அவர் சீனத் தூதரகத்துக்குச் சென்று, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமையவே, தாம் சீனத் தூதரகத்துக்குச் சென்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைக்கு சீனத் தூதரகம் சாதகமான முறையில் பதில் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சீனாவிடம் மேலதிகமாக இரண்டு மில்லியன் தடுப்பூசி மருந்துகளை கேட்டுள்ளதாக, பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தாம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று மாலை வரை 20 ஆயிரத்து 710 பேருக்கு சினோபார்ம் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.