அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டி எடுத்த ஹார்வே புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
13 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் வீசிய சக்தி வாய்ந்த புயலாக ஹார்வே உள்ளது என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய ஹார்வே புயலால் டெக்சாஸ் மாகாணம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும் புயலால் பாதிப்படைந்த ஹூஸ்டன் நகரிலிருந்து சுமார் 2000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
ஹார்வே புயலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். புயலின் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை துரிதகதியில் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் புயல் பாதித்த இடங்களை செவ்வாய்க்கிழமை ட்ரம்ப் பார்வையிட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் பாதிப்பு குறித்து ஹூஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறும்போது, “தற்போது மிக முக்கியமான ஒன்று, மக்களை வெள்ள பாதித்த இடங்களிலிருந்து மீட்பது. மீட்புப் பணி வீரர்கள் படகுகள் மூலம் வெள்ளம் பாதித்த இடங்களிலிருந்து மக்களை மீட்டு வருகின்றனர்” என்று கூறினார்.
அமெரிக்க தேசிய இயற்கை பேரிடர் மையம் கூறும்போது, “பல இடங்களில் 100 செ.மீ மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.