அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடுமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் எனவும், பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அமைச்சர்களாக இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.