இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை தொடர்பாக நடைபெற்றுவரும் மோதல்களை நெருக்கமாகவும், உன்னிப்பாகவும் அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோகாலா பகுதியில் சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு செயல்பாட்டை இந்திய இராணுவம் தடுத்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவிக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நாவெர்ட், “எல்லைப்பகுதியில் நிலவிவரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.
அதற்கு இடமளிக்கும் வகையில் இருதரப்பினரும் தங்கள் இராணுவத்தை திரும்பப்பெற்றால் மாத்திரமே சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
பீஜிங் நகரில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறும் பிரிக்ஸ்ட் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் சீனாவின் பாதுகாப்பு துறை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்” என ஹீத்தர் நாவெர்ட் தெரிவித்துள்ளார்.