தேஜஸ், கிரண் போர் வானூர்திகள் மற்றும், துருவ் உலங்குவானூர்திகளைக் கொண்ட இந்திய விமானப்படையின் அணி ஒன்று நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மார்ச் 3ஆம் நாளில் இருந்து 5ஆம் நாள் வரை கொழும்பு காலிமுகத் திடலில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்கவே இந்திய விமானப்படையின் சூரிய கிரண் வானூர்தி அணியும், சாரங் எனப்படும் உலங்குவானூர்திகளின் அணியும், தேஜஸ் போர் வானூர்தி அணியும் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளன.
எனினும், எத்தனை விமானங்களைக் கொண்ட அணி சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது என்ற தகவலை இந்திய விமானப்படை வெளியிடவில்லை.
சிறிலங்கா விமானப்படை இதுகுறித்து எந்த தகவலையும் இன்னமும் வெளியிடவில்லை.
அதேவேளை, இன்று நண்பகலுக்கு முன்னதாக, கொழும்பு நகருக்கு மேலாக இந்திய போர் விமானங்கள் பலமுறை வட்டமடித்து, பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.