இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. டிடிவி தினகரன், சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்சுரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ். வைத்தியநாதன், கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பிப்ரவரி 8–ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் டெல்லி ஐகோர்ட்டில் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என
டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்சுரா ஷேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மதியம் தீர்ப்பு அளித்து உள்ளது.
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முதலமைச்சர் பழனிசாமி மகிழ்ச்சி
இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கே என்ற தீர்ப்பு குறித்து திருப்பூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.
இரட்டை இலை சின்னம் சம்பந்தமாக நல்ல தீர்வு, நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.
நாங்கள்தான் உண்மையான அதிமுகவினர் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் முதலமைச்சர் பழனிசாமி.
இரட்டை இலை சின்னம் விவகாரம் – சுருக்கம்
தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அதிமுக இரண்டாக உடைந்தது. “அதிமுக அம்மா கட்சி”, “அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி” என இரு அணிகளாக பிளவு பட்டது.
அ.தி.மு.க. தங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க இரு அணிகளும் ஈடுபட்டன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.
சின்னம் முடக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர்.
பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வந்தனர்.
இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வந்தது.
23, நவம்பர் 2017, தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று, இரட்டை இலை அதிமுகவுக்கே என டெல்லி ஐகோர்ட் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.