இலங்கையில் தொடரும் சித்திரவதைகள், இரகசிய சித்திரவதை முகாம்கள், ஆட்கடத்தல்கள், தடுப்புக்காவலின் போது பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நாவில் நேற்று கடுமையான விசாரணைகளை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் நிலையில், இதில் நேற்றும், இன்றும் இலங்கை குறித்த விசாரணைகளும், விவாதங்களும் இடம்பெறுகின்றன.
இலங்கை மீது ஐ.நாவும், ஏனைய உள்ளூர் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுப்பதற்கு, இலங்கையின் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 11 சிறப்பு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது.
திருகோணமலை கடற்படைமுகாமில் அமைந்திருந்த இரகசிய சித்திரவதை முகாமுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பயணம் செய்த ஐ.நா செயற்குழு, மனித எலும்புகளை அங்கு கண்டெடுத்துள்ள நிலையில், இவ்வாறான சித்திரவதை முகாம்கள், அதனை நடத்திய படையதிகாரிகள், பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரச பிரதிநிதிகளிடம் ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் உபதலைவர் பெலீஸ் கியர் அம்மையார் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.
குற்றவாளிக்கூண்டில் சந்தேக நபர்களை விசாரணை செய்வது போன்ற பாணியில் இலங்கை குழு மீது மீது ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் உபதலைவர் பெலீஸ் கியர் அம்மையாரும், அலீசியோ புரூணியும் சரமாரியாகக் கணைகளைத் தொடுத்த நிலையில், அவற்றுக்கு பதிலளிக்க முடியாது இலங்கை அதிகாரிகள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் புதிய அரசு ஐ.நாவின் சித்திரவதை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான சிறப்புச் சாசனங்களில் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும், சித்திரவதைகளும், ஆட்கடத்தல்களும், படையினராலும், காவல்த்துறையாலும் இன்னமும் மேற்கொள்ளப்படுவது குறித்தும் நேற்றைய விவாத்தின் பேர்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் பின்னரும் கூட காவல்த்துறை தடுப்புக்காவலின் போது சுமார் 620 ற்கும் அதிகமான சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதனை இலஙகை மனித உரிமைகள் ஆணைக்குழுவே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதனையும் அவர்கள் அங்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
அத்துடன் தற்போது இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்கள் எதுவும் இல்லை என்று புதிய அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும், சாட்சியங்களின் அடிப்படையில் கிடைக்கப் பெறும் தகவல்களும், தரவுகளும் அதனைப் பொய்யாக்கியிருப்பதாகத் தெரிவித்த ஐ.நா வின் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் அதிகாரிகள், படையினராலும், காவல்த்துறையாலும் தொடரப்படும் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள் போன்ற நடவடிக்கைகள் நிலைமாற்று நீதிச் செயற்பாட்டிற்கு மிகவும் குந்தகம் விளைவிக்கக்கூடியன என்றும் எச்சரித்துள்ளனர்.