இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான தீர்க்கமான முடிவு ஒன்று எதிர்வரும் புதன்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 15ம் நாள் புதன்கிழமை, அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது அரசியல் யாப்பின் அடிப்படை வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளது.
இந்த அறிக்கையை புதிய அரசியல் யாப்பின் அடிப்படை வரைவாக ஏற்றுக் கொள்ளப்படவோ, அல்லது வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் தங்களது சட்ட ஆலோசனை குழுவிடம் அனுப்பி வைக்கவோ வாய்ப்புகள் உள்ளன.
எவ்வாறாயினும் இந்த அறிக்கையை மையப்படுத்தியே புதிய அரசியல் யாப்புக்கான முழுமையான வரைவு, அரசியலமைப்பு சபையினால் தயாரிக்கப்படவுள்ளது எனவும், அது இந்த ஆண்டு இறுதிக்குள் இல்ஙகை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீளிணைப்பு, தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசியலமைப்பு சபையில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.