இலங்கையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்றும், எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் வழங்கும் எனவும் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், வானொலி ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே எஸ்.பி.திசநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருவதாகவும், இந்த நிலையில் இலங்கையில் இராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை முறியடிக்க இந்தியா உதவும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்பும் என்றும்,இலங்கையில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி, இலங்கை படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்றும் கூட்டு எதிரணியினரிடம் எஸ்.பி.திசநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இன்று கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொணடு கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச, தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்த கருத்து இராணுவத்தை எந்த வகையிலும் அகௌரவப்படுத்தாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில், காவல்த்துறை ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும், இது போன்ற நிர்வாகம் உள்ள உலக நாடுகளில் அனைத்திலும் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.