பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது இலங்கையில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் இடம்பெற்றிருப்பதாகவும், இதன் பின்னணியின் சீனாவே இருப்பதாகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அபரீதமாக வளர்ச்சியடைந்தது எனவும், அதனை தடுத்து நிறுத்துவதற்காகவே மைத்திரி – ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டதுடன், இதற்கு மேற்குலக நாடுகளும் இந்தியாவும் பாரிய பங்களிப்பை வளங்கியிருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபட முடியவில்லை எனவும், இந்த நிலையில் இலங்கையில் தங்களுடைய பிடியை இறுக்குவதற்கு மேற்குலகம் – இந்திய கூட்டணி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தது என்றும் அவர் விபரித்துள்ளனர்.
குறிப்பாக, உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் நாட்டில் மகிந்த தரப்பின் கை மேலோங்குவதை உணர்ந்து கொண்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவும், நிலைமை முழுமையாக மாறுவதற்கு முன்னர் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி, மத்தள வானூர்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் குதங்கள், பலாலி விமான நிலையம் போன்றவற்றின் அதிகாரங்களை தம்வசம் எடுத்துக்கொள்வதற்கான அழுத்தங்களை அதிகரித்துள்ளது எனவும், அதனை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டே தற்போதைய அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.