ஈழ மக்களின் விடிவுக்காகவும் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகவும் இறுதிவரை போராடிய ஓர் உன்னத போராளியை உலகம் இழந்து தவிக்கிறது என, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியனின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்,
“‘தோழர் தா.பா என்று எம் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி எம்மை அதிர்ச்சியிலும் மீளாத்துயரிலும் ஆழ்த்தியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் எங்கும் தனது கட்சிக்குள்ளும் டெல்லியிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் குரல் கொடுத்த ஒரு தோழர். அடக்குமுறைகளுக்கு எதிராக அஞ்சாது தனது இறுதி மூச்சுவரை போராடிய ஒருவர்.
மானுடத்தைப் பற்றியும் இனங்களுக்கிடையில் சக வாழ்வைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் எங்களது கட்சிக்குள் எமது தோழர்களுக்கு பல கருத்துரைகளை வழங்கிய ஓர் அன்புத் தோழர். இரவோ பகலோ,வெயிலோ, மழையோ நாங்கள் அழைத்தபோதெல்லாம் எமக்கு ஆலோசனை கூறி எமக்குக் கைகொடுத்த ஒருவர்.“ என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.