ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, முன்னாள் தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மென்டிஸ் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க, ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு தவறினர் என்று குற்றம்சாட்டியுள்ள ஆணைக்குழு, இவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான 5 நீதியரசர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது