கனடாவுக்கான தூதுவராக, நியமிக்கப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயசை, கனேடிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது நியமனம் கனடாவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட போதும், ஒட்டாவாவில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அனுப்பி வைக்கப்படவில்லை.
தூதுவராக ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் தொடர்பான பரிந்துரைகளை குறித்த நாடுகள் தாமதிக்கும் போது, அது நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்று கூறப்படுகிறது.
கனடா இந்த நியமனத்தை தாமதித்து வருவதால், எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயசை கனடா ஏற்றுக் கொள்ளவில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டும் என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே இதுபோன்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்திரானந்த டி சில்வாவை, கனடாவுக்கான தூதுவராக நியமித்த போதும், கனடா அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அமைதி காத்ததால், அந்த நியமனம் கைவிடப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது,
அதுபோன்ற நிலையே தற்போதும் ஏற்பட்டுள்ளதால், எயர் சீவ் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றொரு நாட்டுக்கான தூதுவராக பெயரிடப்படுவார் என்றும் கூறப்படுகிறது.