அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்று ஓர் அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை 14 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோருடன் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கலிபோர்னியா நீதிபதியான டானா சப்ரா கூறியுள்ளார்.
எல்லையில், பாதுகாப்பு அதிகாரிகளால் குழந்தைகள் பிரிக்கப்பட்டதால், பல பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொடர்புகொள்ளவும் இயலவில்லை என்பதால் அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வரும் அகதிகளின் குடும்பங்களை பிரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவினை ‘கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது’ என்று கூறியுள்ள அமெரிக்காவின் 17 மாகாணங்கள், டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக மற்றொரு வழக்கையும் நேற்றுச் செவ்வாய்கிழமை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை அனுமதிக்க மறுக்கும், டிரம்பின் நிர்வாக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.