ஏக்க ராஜ்ய என்ற சிங்கள பதத்தை ஒருமித்த நாடு என்று கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சனம் வெளியிட்டார்.
நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறினார்.
போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் சலிப்புடனான ஏமாற்றத்தை அடைந்துள்ளனர் என்று கூறிய விக்னேஸ்வரன், மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து வாக்குறுதிகளை வழங்கும் கட்சிகள், பின்னர் அரசாங்கத்திற்கு சேவகம் செய்வாதகவும் தெரிவித்தார்.
30 வருட யுத்த வடுக்களில் இருந்து மீளமுடியாத நிலையில் மக்கள் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் தாம் மிகப்பெரிய சவாலுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியைத் தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமான விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் தனக்குக் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியில் எப்போதும் ஜனநாயகத்தின் பால் செயற்படும் என்று தெரிவித்த அவர், தம்மைக் கட்சியிலிருநு;து விலகுமாறு கட்சியிலுள்ளவர்கள் கேட்டால் கூட தாம் அதற்குத் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவையில் உள்ள பலர் எமது ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தர்ர.