ஐக்கிய நாடுகள் சபையின் 46ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் சுவிட்சர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
சுவிட்சர்லாந்து நேரடிப்படி பிற்பகல் 02.30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பினர்.
அத்தோடு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் ஏற்பட்ட சந்திப்பு தொடர்பான தொகுப்பும் இடம்பெற்றது.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள கொரோனா தொற்று உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.