உண்மையான நண்பர்கள் தங்களுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எத்தகைய சவால்களையும் அவர்களுடன் கூட்டாக எதிர்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
“போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து , ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்த சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.
இம்முறை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையை இரண்டு காரணங்களின் அடிப்படையில் முற்றாக நிராகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக, பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைக்கு அமைய, அவருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பால் சென்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை, ஆதாரங்களுடன் நிரூபிக்க அவர் தவறிவிட்டார்.
இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் அறிக்கையை நிராகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விளக்கங்களை வெளியுறவு அமைச்ச்சர் தினேஷ் குணவர்த்தன மெய்நிகர் கூட்டத்தில் வழங்குவார்.” என்றும் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.