நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் புதிதாக எந்த காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்ற போதிலும், தீயணைப்பு படையினர் தொடர்ந்து எரிந்துவரும் 39 காட்டுத்தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றுள் 12 இடங்களில் காட்டுத்தீ இன்னமும் கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்கு பரவி வரும் நிலையில், அந்த பகுதிகளில் உள்ள மக்களை, குறிப்பாக பழங்குடியின குடியிருப்புகளில் உள்ளோரை வெளியேறுமாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் காட்டுத்தீ முகாமைத்துவம் தொடர்பிலான திணைக்களத்தின் தரவுகளின்படி, நேற்று வரையில் ஏறக்குறைய 8,224 ஹெக்டேயர் நிலப்பரப்பினை காட்டுத்தீ சூழ்ந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தென்மேறகு திசையில் இருந்து தொடர்ந்து வேகமாக வீசும் காற்று, தீப்பரவலை வேகப்படுத்திவரும் நிலையில், நெடுஞ்சாலை 69ஐ அண்டிய பகுதிகளில் தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை வரையிலான நிலவரப்படி காட்டுத்தீயானது குறித்த அந்த நெடுஞ்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நெடுஞ்சாலை 69ஐ அண்டிய பிராந்தியங்களை பலத்த புகை சூழக்கூடும் எனவும், இதனால் மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஹென்வே பழங்குடியின குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 200 பேர் வரையானோர், குறைந்தது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் வீடுகளுக்கு திரும்ப முடியாது என்று கூறப்படுகிறது.