எதியோப்பியாவின் டைக்ரே (Tigray) பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எரித்திரியப் படைகளால் கொல்லப்பட்டதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
எதியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து, எரித்திரியப் படைகளும் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரே (Tigray) மீது நடத்திய தாக்குதலின் போது, மனித குலத்திற்கு எதிராக மாபெரும் குற்றம் இடம்பெற்றுள்ளதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு எதியோப்பியாவின் பழங்கால நகரமான ஆக்சூமில் (Axum) எரித்திரியத் துருப்புக்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 41 சாட்சிகள் பதிவாகியுள்ளதாகவும், சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை, எரித்திரியா நிராகரித்துள்ள போதும், எரித்திரியத் துருப்புக்கள் மோதலில் பங்கேற்றன என்பதை சர்வதேச மன்னிப்புச்சபை உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 28 முதல் 29 வரையான 24 மணிநேர காலப்பகுதியில், எரித்திரியப் படைகளால் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, எதியோப்பிய அரசாங்கப் படைகள் டைக்ரேயின் (Tigray) பிராந்திய தலைநகர் மெக்கெல்லை (Mekele) தனித்தனியாகக் கைப்பற்றிய நாளுடன் இது ஒத்துப்போவதாகவும் கூறியுள்ளது.
எரித்திரிய வீரர்கள் குறித்த பகுதியில் ஆண்களையும் சிறுவர்களையும் தெருக்களில் தூக்கிலிட்டுக் கொன்றதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.