இலங்கையில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக காவல்த்துறை திணைக்களத்தின் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு சனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
நாளாந்த அறிக்கையின்படி “டீ” பிரிவு குற்றச் செயல்களாக கருதப்படும் கொலை, பாலியல் குற்றங்கள், வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், கொள்ளை மற்றும் திருட்டு போன்ற ஐந்து விடயங்களை பாரிய குற்றங்களாக கணித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இவ்வாறான குற்றங்களின் எண்ணிக்கை 6,126 ஆக பதிவாகி இருப்பதாகவும், 2015ம் ஆண்டு குறித்த காலப்பகுதியில் இவ்வாறான குற்றங்களின் எண்ணிக்கை 5,978 ஆக பதிவாகி இருந்ததாகவும் குற்ற பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 631 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியிருப்பதுடன், அவற்றில் மனித கொலைகள் 45 பதிவாகியுள்ளதாகவும், 22 காவல்த்துறை பிரிவுகளில் அவை பதிவாகியுள்ளதாகவும், அதிக கொலைக் குற்றங்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.