இந்தியா சென்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடனான விருந்தில் கலந்து கொள்வதற்கு, சீக்கிய பிரிவினைவாதக் குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படும் ஜஸ்பால் அட்வாலுக்கு விடுத்த அழைப்பை கனடா திரும்பப் பெற்றுள்ளது.
ஜஸ்பால் அட்வால் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதிலும், கனேடிய குடியுரிமை பெற்றுள்ள அவர், 1986ஆம் ஆண்டு இந்திய அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்.
தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் சீக்கிய பிரிவினைவாத குழுவின் உறுப்பினராக அவர் இருந்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவ்வாறான நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து தீவிரமாக தாங்கள் கருத்தில் கொள்வதாகவும், ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும், இந்த விடயம் தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் அழைப்பை உடனடியாக திரும்பப் பெற்றுள்ளதாகவும், டெல்லியில் நிருபர்களிடம் பிரதமர் ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த அழைப்பிற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.