அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
தனது நாட்டின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யா முயற்சி செய்வதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
அத்துடன் உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய இராணுவம் படைகளைக் குவித்து வருவதால், எல்லையில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையிலேயே அமெரிக்கா தனது கடற்படையை அங்கு அனுப்பவுள்ளது.
அமெரிக்க கடற்படை கருங்கடலில் வழக்கமான பயிற்சி மேற்கொள்கின்ற போதும், தற்போதைய நிலையில் போர்க்கப்பல்களை அனுப்புவதானது, ரஷ்யாவை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
ரஷ்ய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் உள்ள அதன் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச வான்வெளியில் கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.