காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, தமிழகத்துக்கு, படகுச்சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்து, தமிழகத்துக்கு படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.
துறைமுகப் பகுதியில் உள்ள அணைக்கட்டு அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால், சேதமடைந்துள்ளது. இதனை பாதுகாப்பதற்கு அவசரமாக கருங்கற்கள் தேவைப்படுகிறது.
வடக்கின் வேறு இடங்களில் கருங்கற்களை எடுக்க முடியாது என்பதால், வவுனியாவில் இருந்து அவற்றை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரச அதிபரும், யாழ். மாவட்ட அரச அதிபரும் இணைந்து சுரங்கப் பணியகத்துடனும் கலந்துரையாடி, முரண்பாடுகள் இல்லாத வகையில் விரைவாக அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.