காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என்பதனை வலியுறுத்தியே, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் இதில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை வெளிநாட்டு தலையீட்டைக் கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவினர்களை அனைத்துலக ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ளனர்.
இதன்போது, 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர கைது செய்யப்பட்டமை, காணாமல் போனோர் விடயத்தில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் செயல் என்று உறவுகள் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான போராட்டத்தின் 648 நாளான நேற்றைய நாள் வெள்ளிக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உவினர்களை சந்தித்திருந்த ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் ஊடகவியலாளர்கள், உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றம், புதிய பிரதமர் வருகை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.