காணமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறைத்து வைத்துள்ளதாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படுமிடத்து, அது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எவரேனும் வௌிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பின், அது தொடர்பில் தெரியப்படுத்தும் பட்சத்தில் தூதரகங்கள் ஊடாக தேடிப்பார்க்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.