வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று நடத்தவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தடை விதித்து, வவுனியா நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவுக்கு நேற்று கட்டளைப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு, வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில், காணாமல் போனவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் நீதிமன்றத்தின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இதற்கமைய இந்த ஆர்பாட்டத்தினால், கொரோனா தொற்று பரவுவதற்கும், மற்றும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் இடமுள்ளதாலும், தனிமைப்படுத்தல் விதிமுறை இல்லாமல் போகும் என்பதனாலும், இந்த ஆர்பாட்டத்தை நிறுத்துமாறு, நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.
அத்துடன், சங்கத்தின் தலைவியான காசிப்பிள்ளை ஜெயவனிதாவை, எதிர்வரும் ஜனவரி 4ஆம் நாள் மன்றில் முன்னிலைப்படுமாறும், நீதிவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.