கர்நாடகா மாநிலத்தில் தொடரும் கன மழையினால் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதன் விளைவாக தற்போது காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு காவிரியின் குறுக்கேயுள்ள 4 அணைகளும் நிரம்பியுள்ளதால், அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுகிறது என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையோர கிராம மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கர்நாடகாவில் தொடரும் இந்த கன மழையால் அணைகளின் பாதுகாப்பு கருதி, அவ்வப்போது அணைகள் கண்காணிக்கப்பட்டு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றும், நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் விபரம் வெளியிட்டுள்ளார்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்ற எதிர்பார்ப்பல் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.