கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகம், சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பிரதேச சபை அமர்வில் இன்று அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போது, சபையின் உறுப்பினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்கு உட்படுத்துவதாயின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அவரை விசாரணை செய்ய வேண்டும் எனவும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான நாகேந்திரம் செல்வநாயகம் இன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதானது, மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இன்றைய அமர்வில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.