முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கொன்றினைத் தொடர்வது குறித்து, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்று சுமந்திரனுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பு, வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களும் சுமந்திரனிடம் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக துரைராசா ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சார்ள்ஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட பின்பு, ரவிகரன் முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து நேற்று காவல்துறையினருடன் குருந்தூர் மலைக்குச் சென்று உடைக்கப்பட்ட தடயங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டு இடம் உடைக்கப்பட்டமை ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.