கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தல் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது.
தலைமை நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம், நேற்றுக்காலை தொடக்கம் இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.
நேற்று மாலை 4.15 மணி வரை 14 மனுக்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை 10 மணிக்கும், மீண்டும் விசாரணைகள் தொடங்கப்பட்டு, இடம்பெற்றன.
இதன்போது, சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேலும் 5 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் , இந்த மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 8 இடையீட்டு மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சார்பில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த மனு சார்பில் மூத்த சட்டத்தரணி கனகஈஸ்வரனும், ஏனைய மனுக்களின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.