நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கழுதை என்று திட்டித் தீர்த்த அமைச்சர் சமல் ராஜபக்ச பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டமைக்கு எதிராக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உரையாற்றிய போது, 2010ஆம் ஆண்டில் தமது நாடாளுமன்ற ஆசனம் பறிக்கப்பட்டமை குறித்து அப்போது சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்சவை குற்றம்சாட்டி உரையாற்றினார்.
இதையடுத்து இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சரத் பொன்சேகாவை கழுதை என்றும், நீங்கள் எல்லாம் கழுதைகள் என்றும், கூறிய அமைச்சர் சமல் ராஜபக்ச, வெளியே வா மோதிப் பார்க்கலாம் என்றும் சவால் விடுத்தார்.
இதனால் எதிர்க்கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர், மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, சரத் பொன்சேகாவை கழுதை என்று திட்டியதற்காக மன்னிப்புக் கோருவதாக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.