தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று, சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்ற வெளியிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
சரத் வீரசேகரவின் இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் ஒரு கட்சி என்றும், கருணாவையும், பிள்ளையானையும் மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டு கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று , அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களையும் ஒழித்திருக்க வேண்டும் என்று சரத் வீரசேகர கூறிய கருத்து பாரதூரமானது என்று தெரிவித்தார்.
இதற்காக, அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது என்றும், சாள்ஸ் நிர்மலநாதன், குற்றம்சாட்டினார்.
அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றிய போது, ‘பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து கொண்டு சரத் வீரசேகர வெட்கமின்றி கூட்டமைப்பை தடை செய்யுமாறு கூறுகிறார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.