சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட சிறிலங்கா பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணியாளர்களாக சவூதி அரேபியாவுக்கு சென்றவர்கள் எனவும், எந்த குற்றங்களும் செய்யாத போதும் இவர்கள் கட்டாயத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களிடையே 8 முதல் 18 மாதங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் இருக்கின்றார்கள் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று சிறுவர்களும், தீவிர சிகிச்கை தேவைப்படும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தாம் பணிபுரிந்த இடங்களில் எஜமானர்களின் மோசமான நடத்தை காரணமாக பலர் பணி இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் தமது நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை இழந்துள்ளதாகவும் சிலர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாவும் அம்னெஸ்டி இண்டர்நெஷனல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.