மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் திருகோணமலையில் சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வட.கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
அதில் முக்கியமாக தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் எமக்கான ஆரம்ப புள்ளியாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல்படுத்த வேண்டும் எனவும் இதன்மூலம் இவ்வாறான காணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நாமே தீர்வை பெற முடியும் என்பது தொடர்பாகவும் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.