சிறிலங்காப் படையினரை ஐ.நா அமைதிகாப்புப் படை நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று, ஐ.நாவின் முன்னாள் நிபுணரான யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.
தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணப்பாளரான யஸ்மின் சூகா, அனைத்துலக ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு கோரியுள்ளார்.
அனைத்துலக குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து, நீதியின் முன் நிறுத்தும் சர்வதேச கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு போர்க்குற்றவாளிகளை நியமித்து ஊக்கவித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் விரிவான மறுசீரமைப்போ, வடிகட்டல் நடைமுறைகளோ பின்பற்றப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள யஸ்மின் சூகா, சிறிலங்கா படையினரை தொடர்ந்தும் செயற்பட அனுமதித்தால், ஐ.நா அமைதிப்படையின் நம்பகத்தன்மைக்கு சவால்களை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.