கொரோனா நிலைமை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு தவறான தகவல்களை அளிப்பதாக குற்றம்சாட்டியுள்ள, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், அடுத்து வரும் வாரங்களில் சிறிலங்காவில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள, சங்கத்தின் தலைவர் உபுல் றோகண,
“பண்டிகை காலங்களில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் அரசாங்கத்தை வலியுறுத்திய போதும், அந்த எச்சரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.
இப்போது, நிலைமை கிட்டத்தட்ட கையை மீறிப் போய் விட்டது. அதற்கான விலையை மக்கள் செலுத்த வேண்டும். இப்போது, தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மேல் மாகாணத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று, இப்போது திருகோணமலை, காலி, மாத்தறை, அனுராதபுர, பொலன்னறுவ, குருணாகல, புத்தளம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.
சுகாதார அதிகாரிகள் கொரோனா நிலைமை குறித்த தவறான படத்தை அரசியல்வாதிகளுக்கு காட்டியதால் தான், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த அதிகாரிகள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இதுபோன்ற தவறான விவரங்களை வழங்குகிறார்கள்” என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.