ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை இந்தியா எடுத்து விடக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்கு பொறுப்பான சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, லண்டனில் சகோதரி அம்பிகை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
அவரது உணர்விற்கும், ஈழத்தமிழர்களின் உணர்விற்கும், தமிழ்நாட்டில் வாழும் 7 கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை வலியுறுத்தும் வாக்கெடுப்பு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெற இருக்கின்ற இந்த தருணத்தில், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும்.
அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.